ஆட்சிக்கு வராத கட்சியில் வாரிசு அரசியல் என்பது வெறுங்கூற்று... துரை வைகோ வருகைக்கு சீமான் நச்..!
தமிழக மக்களுக்காக ஒரு அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து ஆட்சிக்கு வராவிட்டாலும். தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது மிகப்பெரும் தியாகம்.
மதிமுக தலைமைக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள துரை வைகோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருக்கிணைப்பாளர் சீமான்.
கடந்த அக்டோபர் 20-ம் தேதி ம.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, ம.தி.மு.க தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டு, முழுநேர கழகப் பணியை மேற்கொள்ள அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ம.தி.மு.கவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ பொறுப்பேற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் துரை வைகோ மரியாதை செலுத்தினார். மேலும் மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ம.தி.மு.கவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ.
இந்நிலையில் துரை வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீமான், ‘’ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள அன்புச்சகோதரர் துரை வைகோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் ஷேக் தாவூத், ‘’தமிழக மக்களுக்காக ஒரு அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து ஆட்சிக்கு வராவிட்டாலும். தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது மிகப்பெரும் தியாகம். அதில் வாரிசு அரசியல் என்பது வெறுங்கூற்று. துரைவைகோ அரசியல் வரவை தமிழ் மாநில முஸ்லிம் லீக் வரவேற்கிறது வாழ்த்துக்கள்’’எனத் தெரிவித்தார்.