“அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஜனாதிபதி ஆட்சி வரும்” - சுப்ரமணிய சாமி மிரட்டல்
தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு பாதிப்பதாக கருதி குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்த நேரிடும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி மிரட்டியுள்ளார்
பொங்கலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தும் போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் உரிமை சார்ந்த விஷயமாக ஜல்லிக்கட்டு விவகாரம் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் நடக்கும் என தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரைக்கும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஏதாவது அதிசயங்கள் நடந்தால்தான் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியப்படுவதுபோல் தெரிகிறது.
இருப்பினும் தடையை மீறி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவரும், சர்ச்சைக் கருத்துகளுக்கு பெயர் போனவருமான சுப்ரமணிய சாமி, ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில். “உச்சநீதிமன்ற அனுமதியின்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால், அதை தடுக்க தமிழக அரசு தவறினால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு கட்டாயம் அமல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.