"என் கேள்விக்கு என்ன பதில்?" : ரஜினிக்கு சுப.உதயகுமார் சவால்!
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று விவாதத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தது.
அந்த விவாதத்தில் கலந்து கொண்ட கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயகுமார், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு ரஜினிக்கு எதிரான கண்டனங்களை பதிவு செய்தனர்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினி ஆதரவாளர்கள், இருவரையும் தாக்க முயற்சித்தனர், அதையடுத்து இருவருமே, டுவிட்டர் பக்கத்தில் தமது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், சுப.உதயகுமார், தம்முடைய கேள்விகளுக்கு ரஜினி உரிய பதில் அளித்தால், அவருடைய கட்சியில் இணைய தயார் என்று கீழ்கண்ட கேள்விகளை முன்வைத்துள்ளார். அவை பின் வருமாறு:-
ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சரியாக அடையாளப்படுத்துவாரா?
நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து, ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?
கூடங்குளம் எங்கள் இடிந்தகரைப் பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடம் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?
கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., மாப்ஸ், ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டிரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?
இவற்றைச் செய்தால், அவரும், ஆண்டவனும் சேர்ந்து துவங்கப்போகும் கட்சியில் இணைந்திட அணியமாய் இருக்கிறேன் நான். இவ்வாறு அதில் சுப உதயகுமார் கூறியுள்ளார்.