ஒரே நாளில் இரண்டு தேர்வுகள்..? தமிழக தேர்வர்களுக்கு மத்திய அரசு வாசலை அடைப்பதா..? சு. வெங்கடேசன் ஆவேசம்
தமிழகத்தில் முதுநிலை படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெறும் அதே நாளில் மத்திய அரசு பணிக்கான தேர்வு நடைபெறுவதன் காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக கல்லூரிகளில் முதுநிலை படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ள அதே நாளில் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக நடைபெற உள்ள தேர்வு தேதி மாற்றக் கோரி பணியாளர்கள் தேர்வு ஆணையம் மற்றும் இந்திய வானியல் துறைக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மத்திய தேர்வாணையம் அக்டோபர் 31ம் தேதியன்று வெளியிட்ட அறிவிக்கையின் படி ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகள், அறிவியல் உதவியாளர் பதவிக்கு டிசம்பர் 14ம் தேதி முதல் 16க்குள்ளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே தேதிகளில் தமிழக கல்லூரிகளில் முதுகலைப் பட்ட செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால் இந்த பணி நியமன தேர்வுகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும். கடந்த காலங்களில் மத்திய அரசு துறை/ நிறுவனங்களின் பணி நியமனங்களில் உரிய பங்கு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்ற நிலைமைகள் இருந்துள்ளன.
2011 இல் அறிவியல் உதவியாளர் தேரேவுகளில் வெற்றி பெற்ற 465 பேரில் 3 பேர், 2017 இல் வெற்றி பெற்ற 1165 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர் என்ற தகவல்கள் தரப்படுகின்றன. 2022 இல் வாசலே இழுத்து மூடப்படுவது போல தேதிகள் உள்ளன. ஆகவே தேர்வு தேதிகளை மாற்ற வேண்டுமென ஸ்டாப் செலக்சன் கமிஷன் மற்றும் இந்திய வானியல் துறைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.