மாணவிக்கு பாலியல் தொல்லை... நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா உருக்கம்..!
இந்த விவகாரம் தன்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் பள்ளி நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ஒய் ஜி மகேந்திரா பள்ளி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை கேகே நகரில் அமைந்துள்ள பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் பணியாற்றும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தரப்பிலிருந்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் ஒய் ஜி மகேந்திரா, இந்த விவகாரம் தன்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் பள்ளி நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் மாணவர்கள் பாதிக்காத வகையில் உரிய முறையில் விசாரணை நடத்தி ஆசிரியர் மீது தவறு இருந்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு எவ்விதமான தவறான பெயரும் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும். மேலும் பள்ளியை நிர்வகிப்பதில் தனக்கோ தன் மகளுக்கோ எவ்விதமான பங்கும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை கேகே நகர் பிஎஸ்பிபி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இது மாதிரியான புகார்கள் கடந்த காலங்களில் தங்களின் கவனத்திற்கு வரவில்லை என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.