தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கே வந்து  மாணவர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான விண்ணப்பம் வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது.

அதிகரித்து வரும் வாகனப் பயன்பாட்டால் வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வாகன உரிமங்களைப் பிராந்திய போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்றுதான் பெறமுடியும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதேபோல, சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால் அதுபற்றிய விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. 

கல்லூரிகளுக்குச் சென்று வாகன உரிமங்களை விநியோகிப்பது மற்றும் சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தில் லேப்டாப், பிரிண்டர், டேட்டா கார்டு உள்ளிட்ட உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்காகத் தமிழக அரசு ரூ.63 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் வாகன உரிமங்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவதும் வாகன விபத்துகளும் குறையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டசபையில் இந்த விவரங்களை வெளியிட்ட விஜய பாஸ்கரிடம், பேருந்துகளால் ஏற்படும் புகை மாசுபாடு குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்குப் பதிலளித்த அவர், எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்க அசோக் லேலண்ட் நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் 2,000 எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறினார்.