இன்று காலை 10 மணிக்கு ரெடியா இருங்க... பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை!
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று காலை 10 மணிக்கு உரையாற்ற உள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று கடந்த ஆண்டு அதிகரித்த நிலையில், பொது முடக்கம் என்று இக்கட்டான நிலைக்கு தேசம் சென்றது. இதனால், வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இரண்டு அலைகளை சந்தித்த நாட்டு மக்கள், தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள். அதற்கு கொரோனா தடுப்பூசியும் முக்கிய காரணமாக இருந்தது. கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு கொரோனா அச்சம் போக்கப்பட்டது.
137 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் தடுப்பூசி பணிகள் பெரும் மலைப்பாக இருந்தது. ஆனால், கடந்த 10 மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதித்திருக்கிறது. 100 கோடி தடுப்பூசி என்ற மைல்கல்லை எட்டிய போது உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு பாராட்டுகள் தெரிவித்தன. இந்த மகத்தான சாதனையை எட்டிய நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். கொரோனா தடுப்பூசி சாதனை பற்றியும் மேற்கொண்டு பண்டிகை நாட்களில் விழிப்புணர்வோடு இருப்பது பற்றியும் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.