மாநிலங்களவை எம்.பி. இடைத்தேர்தல்.. போட்டியின்றி திமுக வெல்வது உறுதியானது..!
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி.யைத் தேர்வு செய்வதற்கான மனு தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது. திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் அதிமுக மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த முகமது ஜான் மார்ச் மாதத்தில் காலமானா. அவரது மறைவால் அவர் வகித்து வந்த எம்.பி. பதவி காலியானது. இப்பதவிக்கு செப்டம்பர் 13 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 24 அன்று தொடங்கியது. முதல் நாளில் பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், மதிவாணன் என மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர் முகமது அப்துல்லா 27 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்தத் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவு உள்ள திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. எனவேதான் மற்ற கட்சிகள் எதுவும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்க உள்ளது. சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். ஏனெனில், சுயேட்சை வேட்பாளர்களை எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியவில்லை. எனவே, திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இந்தப் பதவிக்காலம் 2025 ஜூன் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.