எடப்பாடியின் கூட்டத்தில் ஸ்டாலினின் ஸ்லீப்பர் செல்! கோட்டையில் ருத்ரதாண்டவம் ஆடவிட்ட பின்னணியில் யார்?
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணியில் தினகரனின் ஸ்லீப்பர் செல்களும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணியில் எடப்பாடியின் ஸ்லீப்பர் செல்களும், தினகரனின் அணியில் மோடியின் ஸ்லீப்பர் செல்களும் இருப்பதெல்லாம் ஒரு மேட்டரேயில்லை.
ஆனால் எடப்பாடியாரின் அரசு கட்டமைப்பின் உச்ச நிலையில் ஸ்டாலினின் ஸ்லீப்பர் செல் இருந்தார்! என்பது எவ்வளவு அதிர்ச்சிகரமான விஷயம்?! என்று அங்கலாய்க்கிறார்கள் அமைச்சர்கள்.
ஆக்சுவலி இன்னாமா ப்ராப்ளம்?...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வேளாண்மைத் துறை தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த துறையின் பல உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த துறையின் செகரெட்டரியான ககன் தீப் சிங் பேடியிடம் ஒரு குறிப்பிட்ட பிராஜெக்டை காட்டி, ‘இதற்கு ஏன் ஓய்வு பெற்றவரான இளங்கோவை நியமித்துள்ளீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார் கடுப்பு படர்ந்த முகத்துடன். முதல்வர் இப்படி குறிப்பிட்டுக் கேட்கும் வண்ணம் மிக அந்த இளங்கோ அப்படி என்ன முக்கியஸ்தர்? என்றால்...கடந்த தி.மு.க. ஆட்சியில் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது அவரது சீனியர் பி.ஏ.வாக இருந்த நபர் இவர். அப்போது கோட்டையில் இளங்கோவுக்கு தனி அதிகாரம் உண்டு. அவரைப் பார்த்து மற்ற துறையின் செயலர்கள் நடுங்கிய நாட்கள் ஏராளம்.
அப்படி ஸ்டாலின் கை விரல்களில் ஒன்றாக இருந்தவர், அ.தி.மு.க. அரசு அமைந்ததும் அவர் முன்பு பணியாற்றிய வேளாண்மை துறைக்கே மீண்டும் திருப்பியனுப்ப பட்டார். கிட்டத்தட்ட பதினோறு மாதங்களுக்கு முன் ரிட்டயர்டும் ஆகிவிட்டார். ஆனால் அவர் மீண்டும் வேளாண்மை துறையின் ‘தொடர் விநியோக மேலாண்மை!’ என்கிற மத்திய அரசின் திட்டத்துக்கு பொறுப்பு அதிகாரியாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்துடன் காண்ட்ராக்ட் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஸ்டாலினின் பி.ஏ. வாக இருந்தவர் ரிட்டயர்டு ஆன பின்னும் அ.தி.மு.க. அரசின் செல்வாக்கு மிக்க துறையில் நியமிக்கப்பட காரணம் என்னவா? அதன் பின்னணி யார்? என்று விசாரித்தால் தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரின் மகனுக்கு மிக நெருங்கிய இடத்தில் நண்பராக இருக்கிறாராம் இந்த இளங்கோ. அந்த அழுத்தத்தில்தான் மீண்டும் இப்படியொரு போஸ்டிங்கில் வந்து உட்கார்ந்தாராம்.
இந்த தகவலெல்லாம் முதல்வரின் காதுகளுக்கு போய்விட, அந்த கடுப்பில்தான் ஆய்வு கூட்டத்தில் ககன் தீப்சிங் பேடியிடம் கணீரென கேட்டிருக்கிறார். ‘எதிர்கட்சி அனுதாபிதான் இந்த பதவியில் ஓய்வுக்கு பின்னும் அமர்த்தப்பட வேண்டுமா?’ என்று பொளேரென கேள்வி கேட்டிருக்கிறார். அப்போது அதிகாரிகள் தரப்பிலிருந்து ‘அமைச்சர் தரப்பு பிரஷர் கொடுக்கும் போது நாங்கள் எப்படி சார் மீறுவது?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
உடனே முதல்வரின் கோபம் அமைச்சரவை மீது திரும்பியிருக்கிறது. ‘அதிகாரம் இருக்குது எனும் தைரியத்தில் எதை வேண்டுமானாலும் செய்வதா? எதிர்கட்சி தலைவருக்கு நெருக்கமான மனிதரை இப்படியொரு போஸ்டிங்கில் அதிலும் ஓய்வுக்கு பின்னாடியும் உட்கார வைத்தால் அரசின் கொள்கை முடிவுகள், உள் விவகாரங்கள், திட்டங்கள், அரசியல்கள் எல்லாம் எதிர்கட்சியின் தலைமையை எளிதில் சென்று சேர்ந்துவிடாதா?’ என்று கொதித்துவிட்டாராம் தனக்கு மிக நெருங்கிய உயரதிகாரிகளிடம்.
முதல்வர் ஆடிய ருத்ரதாண்டவத்தின் விளைவால் இளங்கோ தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்! என்றே தகவல்.