ஜூன் 3-ல் கருணாநிதியை சந்திக்க வேண்டாம் – தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்...
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 8 மாதங்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தினர், கட்சியின் முக்கிய தலைவர்கள் தவிர வேறு யாரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், கருணாநிதியின் வைர விழா அவரது 94 வது பிறந்தநாளான வரும் ஜூன் 3 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.
தற்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஜூன் 3-ல் கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கருணாநிதிக்கு நோய்தொற்று ஏற்படாமல் இருக்க பார்வையாளர்கள் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதனால், கருணாநிதியின் பிறந்த நாள் அன்று தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.