நீட்டுக்கு எதிராக போராட்டம் - களத்தில் குதித்த எதிர்கட்சி தலைவர்கள்...
சென்னை சேப்பாக்கத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி அனைத்து கட்சியினர் சார்பில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி, பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலையில், அரசு உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டது எனவும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எதிர்கட்சிகள் அறிவிப்புகள் வெளியிட்டன.
அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி அனைத்து கட்சியினர் சார்பில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகல கட்சி திருமாவளவன், காங்கிரஸ் சட்ட மன்ற குழு தலைவர் ராமசாமி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்த போராட்டத்தில் முழக்கங்கங்களும் எழுப்பபட்டன.