#farmlawsஉழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… பிரதமரின் அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு!! | CMStalin
#CMStalin | மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் திட்டம் என்று பிரதமர் மோடி ஓராண்டாக கூறிவரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. செங்கோட்டை முற்றுகை, டிராக்டர் பேரணி, ரயில் மறியல், பல மாதங்களாக சாலைகள் மூடல் என விவசாயிகள் போராட்டம் பெரும் நாடு முழுவதும் பேசப்பட்டது.
இந்தநிலையில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும் நாட்டில் விவசாயிகள் 80% பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர் என்றும் கூறிய அவர், விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்றும் ஆனால் தங்களால் விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். விவசாயிகளிடம் தான் மன்னிப்பு கோருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுகிறது என்றும் போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லும் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதை மத்திய அரசின் நோக்கம் என்றும் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும் இதற்கான மசோதா எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என்றும் இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உழவர் பக்கம் நின்று போராடியதும் வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.