"கமலை பற்றி பேச இந்த ஊழல் அரசுக்கு தகுதியே கிடையாது" - ஸ்டாலின் காட்டம்!
நடிகர் கமலின் கருத்து பற்றி பேச, ஊழல் அரசுக்கு அருகதையே இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் நீட் தேர்வில் விலக்கு அளிக்க போராட்டம் நடத்துவது, முரசொலி பவளவிழா கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முரசொலி நாளிதழின் பவள விழா கொண்டாட இருக்கிறோம். அதற்கான தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். அழைப்பிதழ்கள் அச்சடித்து, அனைவருக்கும் வழங்குவோம். இதில், நடிகர் ரஜினி மற்றும் கமல் பங்கேற்பார்கள்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் சென்று, வென்று வந்தால் மகிழ்ச்சி.
நடிகர் கமல் கூறிய கருத்து, ஜனநாயக உரிமை. அதுபற்றி பேச ஊழல் அரசுக்கு அந்த அருகதையும் இல்லை. கமலின் விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியாத அரசுக்கு, அவரை பற்றி பேச தகுதியே இல்லை. இங்கு ஊழல் நிறைந்த குதிரை பேர ஆட்சி நடக்கிறது.
சட்டப்படி உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவது பற்றி, பொறுப்பில் உள்ளவர்களுக்கே தெரியவேண்டும். அவர்களே அதை பற்றி சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசனை திமுகவும், ஓ.பன்னீர்செல்வமும் இயக்குவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “திமுகவையே தலைவர் கருணாநிதிதான் இயக்குகிறார். நாங்கள் அவரது கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருக்கிறோம்” என்றார்.