நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியில் 1,20,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்துள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 80-ம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. அப்போது 7 நிர்வாகிகளில் ஒருவராக இளைஞரணியில் பணியை தொடங்கினேன். நான் கலைஞரின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.

நன்றாக உழைப்பேன் என்ற பெயரை கலைஞரிடத்தில் வாங்கியிருக்கிறேன். நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன். நான் பொறாமைப்படும் அளவுக்கு உதயநிதி செயலாற்ற வேண்டும்.

இளைஞரணியில் விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பார்கள் என நம்புகிறேன். உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழகம் முழுவதும் இன்னும் ஏராளமான உறுப்பினர்கள் சேர்க்கப்பட இந்த நிகழ்ச்சி காரணமாக இருக்கும் என உதயநிதியை ஸ்டாலின் புகழ்ந்து தள்ளினார்..