சீறும் சிறுபான்மை வாக்கு வங்கி! உளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்.. திகைத்த ஸ்டாலின்..
’சிறுபான்மையினரின் நம்பிக்கையை இழக்க துவங்கியுள்ளதா தி.மு.க.?’ தமிழக அரசியல் கள விமர்சகர்களின் அதிரடி கேள்வி இதுதான்?
’சிறுபான்மையினரின் நம்பிக்கையை இழக்க துவங்கியுள்ளதா தி.மு.க.?’ தமிழக அரசியல் கள விமர்சகர்களின் அதிரடி கேள்வி இதுதான்? காரணம்?....கடந்த சில வாரங்களாக தி.மு.க. அரசின் பேச்சும், செயலும், அது குறித்து எழும் எதிர்விளைவுகளும்தான் இப்படியொரு விமர்சனம் எழுவதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
அப்படி என்ன செய்துவிட்டது தி.மு.க?
முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் உள்ள சுமார் எழுநூறு கைதிகளை முன்விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ’ஏதோ உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டவர்கள், திருந்தி வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும்! தங்களை நம்பி இருக்கும் குடும்பங்களை மீண்டும் தூக்கி சுமப்பதற்கான ஒரு வாய்ப்பையும் அரசாங்கம் அவர்களுக்கு வழங்குகிறது. எனவே இது வரவேற்கப்பட வேண்டிய முடிவே!’ என்று பாராட்டப்பட்டது. ஆனால் அதேவேளையில் சிறுபான்மை சமூகத்திலடங்கும் இஸ்லாமியர்கள் இந்த உத்தரவை தொட்டு தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அதாவது இந்த எழுநூறு பேரில் இஸ்லாமியர்கள் மிக மிக மிக குறைவு! என்றும், கோயமுத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையிலிருக்க கூடிய அப்பாவிகளும், ஜீரணிக்க முடியாத காலங்களுக்கு சிறைத்தண்டனையை அனுபவிப்பவர்களுமான நபர்கள் சிலரை விடுதலை செய்ய அரசு முன் வராததாக சுட்டிக்காட்டினர். அரசின் இந்த போக்கை எதிர்த்து ஆர்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன கோவை உள்ளிட்ட சில இடங்களில். இதெல்லாம் தமிழகம் முழுக்க உள்ள ஜமாத்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆக தி.மு.க. அரசுக்கு எதிராக தமிழக இஸ்லாமியர்களின் முகங்களில் ஏற்கனவே ஒரு அதிருப்தி ரேகை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு விவகாரமும் இப்போது தலையெடுத்துள்ளது. அது, பிரதமர் மோடியின் தமிழக வருகைதான். அதாவது தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பதினோறு புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜனவரி 12-ல் தமிழகம் வருகிறார். பொதுவாகவே தமிழகத்திற்கு மோடி வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்று சொல்லியே பழக்கப்பட்டுவிட்ட தி.மு.க. அண்ட்கோ இப்போது அப்படி சொல்ல வழியில்லாமல் கையை பிசைகிறது. காரணம், தமிழகத்தை ஆள்வது தி.மு.க. அரசு. அப்படி ஏதேனும் எதிர்ப்பு காட்டினால் அது அரசுக்கு சிக்கலை உருவாக்குமல்லவா!?
மேலும் தி.மு.க.வும் தன்னுடையை இணையதள அணிக்கு ‘பிரதமரை எதிர்க்கும் வகையில் ஒரு போஸ்ட்டும் போடக்கூடாது’ என்று வலுவான வாய்மொழி உத்தரவை இட்டுள்ளதாகவும் தகவல். இதெல்லாம் தமிழகம் முழுக்க இருக்கும் பள்ளிவாசல்கள், ஜமாத்களின் கவனத்துக்கு சென்றது. அவர்கள் ‘இது உண்மையாக இருக்குமா?’ என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, தி.மு.க.வின் எம்.பி.யான ஆர்.எஸ்.பாரதியோ ‘மோடி எங்களுக்கு எதிரியல்ல. இந்துத்வாதான் எங்களின் எதிரி. எனவே தமிழகம் வரும் பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இப்போது எங்களின் விருந்தாளி. எனவே அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை.’ என்று போட்டாரே ஒரு போடு.
அதிர்ந்து போய்விட்டது சிறுபான்மை சமூகம். ‘இப்போது எந்த அடிப்படையில் மோடியை வரவேற்கிறது தி.மு.க? அன்று அ.தி.மு.க. ஆட்சியின் போது என்ன சூழல் இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் நமக்கு (சிறுபான்மையினருக்கு) இருக்கிறது! தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வந்ததுமே, மத்திய அரசு தன்னுடைய சிறுபான்மையை அலட்சியம் செய்யும் போக்கை மாற்றிக் கொண்டுவிட்டதா என்ன? சூழல் ஒன்றும் மாறவில்லையே! நிலைமை இப்படியிருக்க இப்போது தி.மு.க.தான் நிறம் மாறி நிற்கிறது.
தங்களுக்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக நம்மை அலட்சியப்படுத்தும் தி.மு.க.வை ‘சிறுபான்மையின காவலன்’ என இனி சொல்வது நமக்கு தகுமா? இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப் போடத்தான் வேண்டுமா?’ என்றெல்லாம் பரபரக்க துவங்கியுள்ளனர்.
இவற்றை அப்படியே ஸ்மெல் செய்து, முதல்வரின் கவனத்துக்கு ரிப்போர்ட்டாக தந்துவிட்டது உளவுத்துறை. என்ன செய்வது என்று யோசிக்கிறாராம் முதல்வர்.
கஷ்டம்தான்!