முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி இன்று மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா இன்று காலை மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

காலை சுமார் 10 மணியளவில் சசிகலா அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அங்கேயும் மரியாதை செலுத்தினார். அப்போது, அவரது கண்ணீர் நீர் வடிந்தது. அதனை துடைத்தபடியே,எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி விட்டு புறப்பட்டு சென்றார்.

அவருடன் முதல்வர் ஓ.பி.எஸ்., அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், கே.ஏ.செங்கோட்டையன், பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், பண்ருட்டி ராமச்சந்திரன், தம்பித்துரை, மாநில அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் க.அன்பழகன், துரைமுருகன், அ.ராசா, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், அண்ணா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.