உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்து முடிவை எடுங்கள் - கவர்னருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சசிகலா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மனதில் வைத்து , மக்கள் விரும்பும் நல்ல முடிவை எடுங்கள் என்று மு.க. ஸ்டாலின் கவர்னருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அது மட்டுமின்றி “முதலமைச்சர் பதவி”யின் கண்ணியத்தையும் சூறையாடி, “மாநில சட்டமன்றத்தின்” மாண்பையும் “சின்னம்மா புகழ் பாடி” கெடுத்து இன்றைக்கு தமிழகத்தில் மாபெரும் அசிங்கத்தை “பிணைக்கைதிகள்” போல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பிடித்து வைத்து நிறைவேற்றியிருக்கிறார் அதிமுகவின் திடீர் பொதுச் செயலாளர் திருமதி. சசிகலா.
இந்த அரசியல் அநாகரீக, அரசியல் சட்ட விரோத செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய சூழலில், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சட்ட “வெற்றிடம்” பற்றி தீவிர ஆலோசனை நடத்தி, மாநில நிர்வாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த நடவடிக்கையின் பின்னனியில் “அடுத்து வரவிருக்கின்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு” மற்றும் “அமைய வேண்டிய நிலையான ஆட்சி" ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு மக்கள் விரும்பும் நல்லதொரு முடிவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.