ஏற்கனவே நடந்த ரெய்டுலாம் என்ன ஆனது? லிஸ்ட் போடும் ஸ்டாலின்.. அடுக்கடுக்கான கேள்விகள்..!
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் அதிமுக தொண்டர்களிடையே ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஜெயலலிதாவை தெய்வமாகவும் போயஸ் கார்டன் வீட்டை கோவிலாகவும் மதித்த தற்போதைய ஆட்சியாளர்கள் சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
சசிகலாவை மையப்படுத்திய சோதனை, ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ், குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர், அன்புநாதன், சேகர் ரெட்டி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடம் நடந்த வருமான வரி சோதனையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்களிடமிருந்து என்னென்ன கைப்பற்றப்பட்டன? அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டதா?
எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், என்ன காரணத்திற்காக இந்த சோதனை எல்லாம் நடத்தப்பட்டது? என அடுக்கடுக்கான கேள்விகளை ஸ்டாலின் எழுப்பினார்.
முதலில் இதுவரை நடந்த வருமான வரி சோதனைகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பார்ப்போம். அதன்பிறகு தற்போது நடக்கும் சோதனையை பற்றி கருத்து கூறுவதாக ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்தார்.