"ஜெயலலிதா...ஜெயலலிதாதான்...!!" - புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்!!
என்னதான் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டாலும் ஜெயலலிதா ஜெயலலிதாதான் என்று ஸ்டாலின் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்தில் இருந்து, வெளியேற வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள போராட்டக்குழுவினர் மத்தியில் ஸ்டாலின் பேசினார்.
அப்போது பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும் அந்த விபரங்களை பட்டியலிட்டார்.
கதிராமங்கலம் பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வந்ததது என்று தெரிவித்த ஸ்டாலின், போராடுபவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டியதாக கூறினார்.
அதிமுக ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் ஜிஎஸ்டிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் ஜெயலலிதா.
அதே போல உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம் என மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
என்னதான் ஜெயலலிதா சர்வாதிகார போக்குடன் செயல்பட்டாலும் மத்திய அரசு, மாநில அரசைக் கட்டாயப்படுத்திக் கொண்டு வரும் திட்டங்களுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியுமா? நான்தான் மறுப்பு தெரிவிக்க முடியுமா?
ஆனால், ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட திட்டங்களுக்கெல்லாம் அவரது பெயரை சொல்லி ஆட்சி செய்கிறவர்கள் முழு ஆதரவு தருகிறார்கள். தி.மு.க. கொண்டுவந்த திட்டமாகவே இருந்தாலும், மீத்தேன் திட்டத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டியதுதானே. என்னதான் இருந்தாலும்ஜெயலலிதா, ஜெயலலிதாதான்' என்று புகழ் மாலை பாடினார்.