ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அரசு ஆன்மீக அரசு.. பாஜவை அலறவிட்ட 11 ஆதீனங்கள்.
திருக்குவளையில் மரகதலிங்கத்தை திருக்கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் இது அனைத்தையும் முதல்வர் நிதானமாக கேட்டுக்கொண்டார். நிஜத்தில் இந்த அரசு ஆன்மீக அரசு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.
தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசு ஆன்மீக அரசுதான் என தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் பாராட்டியுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் சந்திப்பிற்கு பின்னர் இவ்வாறு கூறியுள்ளனர்.
திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜக -அதிமுக அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாஜக ஸ்டாலின் அரசு மீது கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. மீண்டும் மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கி விட்டது. என விமர்சித்து வரும் அதே நேரத்தில் திமுக அரசு இந்து விரோத அரசு என்றும் அடிக்கடி குறை கூறி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராகவே இவ்வாறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வரை சந்தித்த ஆதினங்கள் தமிழக அரசின் நிர்வாகத்தை பாராட்டியுள்ளனர். அதாவது, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஆதினங்கள் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்தில் திருவாடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், பேரூர் ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், துலாபார ஆதீனம், அவிநாசி மடாதிபதி, மலையப்ப ஆதினம் உள்ளிட்ட 11 ஆதினங்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் உடன் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
5 ஆம் தேதி அறநிலை துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ள நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழகத்தில் தெய்வீக பேரவையை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். ஆதினங்களுக்கான சட்டதிட்டங்கள் பழக்கவழக்கங்களை உரிய வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வரிடம் கூறினோம்.
திருக்குவளையில் மரகதலிங்கத்தை திருக்கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் இது அனைத்தையும் முதல்வர் நிதானமாக கேட்டுக்கொண்டார். நிஜத்தில் இந்த அரசு ஆன்மீக அரசு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய பொன்னம்பல அடிகளார் குன்றக்குடி ஆதீனம், தஞ்சாவூரில் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து அனைவரின் உள்ளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தேரோட்டத்தில் தீவிர முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். மொத்தத்தில் இந்து சமய அறநிலைத்துறை ஜனநாயகமாக செயல்படுகிறது சட்ட வரையறைக்கு உட்பட்டு செயல்படுகிறார்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து பாஜகவை சேர்ந்தவர்கள் இந்து சமய அறநிலைத்துறை கலைக்கப்பட வேண்டும் என்றும், அவசியமில்லாமல் கோவில் விவகாரங்களில் அறநிலைத்துறை தலையிடுகிறது அறநிலை துறை மூலம் இந்து மதத்தை கட்டுப்படுத்த சதி நடக்கிறது என்றெல்லாம் விமர்சித்து வரும் நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஜனநாயகப் பூர்வமாக செயல்படுகிறது என்றும், இந்த அரசு ஆன்மீக அரசுதான் என்றும் ஆதீனங்கள் கூறியிருப்பது அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.