பாவத்துக்கான பரிகாரத்துக்காகவே தூர் வாருகிறார் ஸ்டாலின் - பொங்குகிறார் பொன்னார்
இந்திய நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி அசாம் மாநிலத்தில் 9.15 கி.மீ. நீளமுள்ள உலகிலேயே பெரிய மேம்பாலத்தை பிரம்மபுத்திரா நதிக்கு இடையில் கட்டி முடித்து, திறந்து வைத்துள்ளார்.
இந்த பாலத்தின் மூலம் அசாம், அருணாசல பிரதேசங்கள் இடையே போக்குவரத்து மேம்படும். ராணுவ போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மோடி பதவியேற்கும் போது 4 கோடி வங்கி கணக்குகள் இருந்தன. இப்போது அது 28 கோடி வங்கி கணக்குகளாக உயர்ந்துள்ளது. 60 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை மோடி அரசு வேகமாக நிறைவேற்றி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் வீடுகள் கட்டி கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுள்ளோம். 19 கி.மீ. அமைய உள்ள இந்த சாலை மேலும் 10 கி.மீ. இணைக்கப்பட்டு 29 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைய உள்ளது.
இதற்காக ரூ.4 ஆயிரம் கோடி திருத்திய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இப்பணிகள் முடிவடையும்.
அதிமுகவின் அரசில் எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு வந்து 100 நாட்கள் கடந்துவிட்டது. இதற்கு நான், எனது பாராட்டை தெரிவிக்கிறேன்.
தமிழகம் முழுவதும், மு.க.ஸ்டாலின் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யவே குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஜூன் 3ம் தேதி கூட்டணி அமைப்பதற்காகவே தி.மு.க. சார்பில் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் வட இந்திய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
அதிமுக அணிகளுக்கு இடையே கட்டப்பஞ்சாயத்து செய்வதாக பிரதமர் மீது குற்றம்சாட்டி மு.க.ஸ்டாலின் வடமாநில தலைவர்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார்.
பாஜகவுக்கு மாற்றுக்கட்சிகளின் பிரச்சனையில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. பிரதமரும் ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்.
குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பாலப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தென்னிந்தியாவிலேயே இரும்புத் தூண்களுடன் அமையும் பாலமாக அமைக்கப்படுகிறது. இந்த பாலம், 2018 ஜூலை மாதத்துக்குள் முடிந்துவிடும்.
இதேபோல் தக்கலை, பார்வதிபுரம், வடசேரி, கோட்டார், செட்டிக்குளம் பகுதிகளில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான மண் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.