தமிழக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது, இதில் திமுக, காங்கிரஸ், ஓபிஎஸ் அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அவை தொடங்கியதுமே ,ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் சபாநாயகர் தனபல் மறுத்துவிட்டார்.

இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. மேஜைகள் நொறுக்கப்பட்டன. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து பிற்பகலில் திமுக உறுப்பினர்களை சபாநாயகரின் உத்தரவின்பேரில் அவை காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது,

இதையடுத்து ஆளுநர் மாளிகை சென்றற திமுக உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து புகார் அழித்தனர். தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்தினர்,இதனால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பேரவையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பேரவை நிகழ்வுகளை கண்டித்து வரும் 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தபடும் என அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் பற்றி, நேற்று கவர்னரிடம் தெரிவித்துள்ளோம். அப்போது, அனைத்து ஆதாரங்களையும், சமர்ப்பித்துள்ளோம். மேலும், இதுதொடர்பாக ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க இருக்கிறோம்.

ஜனாதிபதியை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டுள்ளோம். விரைவில், எங்களுக்கு அனுமதி கிடைத்தவுடன், தமிழகத்தில்நடைபெறும் ஆட்சியை குறித்தும், சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து விரிவாக பேசுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.