stalin condemns TN govt
இரட்டை இலை லஞ்ச வழக்கில் கைதாகி தினகரன் திகார் சிறையில் இருந்த வரை ஒரு மாதிரியாகச் சென்ற அரசியல் களநிலவரம், அவர் பிணையில் விடுதலையானதன் பின்பு கலவரமாக மாறியுள்ளது
கட்சியில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு. இன்னும் இரண்டு மாதம் கெடு. அதற்குள் அனைத்தையும் சரி செய்து கொள்ளுங்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் மீண்டும் குபீர் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினகரினின் இந்த அதிரி புதிரி பேட்டிகளால் ஆட்டம் கண்டுள்ள ஆளுங்கட்சி அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போயுள்ளது. இருப்பினும் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தமிழகத்தில் ஆட்சி கலைய வாய்ப்பில்லை, இன்னும் மூன்றாண்டுகள் ஆட்சி நடைபெறும் என்று அரசுத் தரப்பிலும், அமைச்சர்களும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் தமிழக அரசையும் மோடி அரசையும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வகை தொகையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்," கிணற்றில் போட்ட கல் போல கிடப்பது தான் நிரந்தரமா..?மக்களுக்கு பலன் தராத ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி."
"குற்றவாளியின் பினாமி அரசாகத் தான் பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்றது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் பினாமி அரசாக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு மாறியிருக்கிறது.

தமிழகத்தின் நலன் காக்கும் திட்டங்களை கருணாநிதி தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது."
தமிழக அரசு திவாலாகும் அளவுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் சுமையை தற்போதைய அரசு உண்டாக்கியுள்ளது. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நிர்வாகத்தில் ஆரம்பித்த சீரழிவு, ஓ.பி.எஸ்..., பழனிச்சாமி ஆட்சியிலும் வளர்ந்தபடியே இருக்கிறது." இவ்வாறு தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
