stalin condemns central govt

மாட்டிறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட மத்திய அரசின் தடை உத்தரவை ரத்து செய்யாவிட்டால், மீண்டும் ஒரு மெரினா புரட்சி வெடிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து அவர், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பேசியதாவது:-

மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காக்கிறது. 

ஏற்கனவே தமிழக விவசாயிகள் வறட்சி உள்ளிட்ட பல விவகாரங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சமயத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் பாஜக அரசு இந்த தடையை கொண்டு வந்துள்ளது.

பாஜக அரசின் 3 ஆண்டு ஆட்சியில் சாதனைகளை விட சோதனைகளே அதிகம் உள்ளன. மோடி அரசின் சாதனை என எதுவும் இல்லை. வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் சேர்ப்போம் என்றார்கள். 15 ரூபாயாவது போட்டார்களா.

மோடி விரும்புவதை தான் நாம் சாப்பிட வேண்டும் என்றால் தனிமனித உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. சுதந்திர நாட்டில் வாழ்வதாக கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது போன்ற தடைகளால் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறது.

மாட்டிறிச்சை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் மட்டுமே உள்ளது. இதில், மத்திய அரசிடம் இல்லை என நீதிமன்றம் தெளிவாக சூட்டிக்காட்டியுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் பாஜக அரசு மதிக்காமல் செயல்படுகிறது. தமிழக மக்களிடம் திணிக்க பார்க்கிறது. மத்திய அரசு, தற்போது அரசியல் சட்ட உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.

மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மாடு விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 3 ஆண்டுகளில் எதுவும் செய்யாததை மூடி மறைக்கவே இந்த தடை உத்தரவு.

எந்த மாநிலத்திலும் நடக்காத அதிசயம் தமிழகத்தில் நடந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 3 முதல்வர்கள் 5 முறை பிரதமரை சந்தித்துள்ளனர். ஆனால் தமிழக வளர்ச்சி திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

வெங்கைய நாயுடு தலைமை செயலகத்தில் ஆய்வு செய்து விட்டு, எச்சரிக்கையும் செய்து விட்டு சென்றுள்ளார்.

தமிழக அரசு ஒழுங்காக செயல்பட வேண்டும் என மத்திய அரசு எச்சரிப்பது வெட்கக் கேடான விஷயமாக அமைந்துள்ளது.

மோடி ஆட்சியில் முதல்வர் எல்லாம் நகராட்சி தலைவர்கள் ஆகி விட்டனர். இந்த தடை கொண்டு வந்து 8 நாட்கள் ஆகிறது. மற்ற மாநில முதல்வர்கள் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து விட்டனர்.

ஆனால் தமிழக முதல்வரோ தடை உத்தரவை முழுமையாக படித்து பார்த்து விட்டு தான் சொல்வோம் என்கிறார்.

இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், கடந்த ஜனவரி மாதம் மாணவர்களால் மெரினா புரட்சி போன்று, மீண்டும் ஒரு புரட்சி உருவாகும் இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.