"அதிகார மீறல்களால் தமிழக அரசை முடக்க பாஜக திட்டம் போடுகிறது" - ஸ்டாலின் குற்றச்சாட்டு
அமலாக்கப்பிரிவு, சிபிஐ, வருமான வரித்துறையை வைத்து மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தமிழகத்தை சீர்குலைக்க பார்க்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வங்கி கடனை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு நூதன போராட்டங்கள் நடத்துகின்றனர். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
ஆனால் தமிழக மக்கள் பிரச்சனைகளை பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவை வைத்து கொண்டு மத்திய அரசு அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது.
பாஜகவை பொறுத்தவரை, வருமான வரித்துறையை முடுக்கிவிட்டு அரசை நிலை குலைய செய்து வருகிறது. இதுபோன்ற ஆட்சியை தடுக்க வருமன வரித்துறையை முடுக்கிவிட்டு தமிழக அரசை நிலை குலைய செய்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், தமிழகத்தில் நிலையான ஆட்சியை நடத்தவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை பாஜக, சித்து விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் அதிகார மீறல்களால், தமிழக அரசை முடக்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.