முதியவரிடம் சாதியை கேட்ட மு.க.ஸ்டாலின்..? வெறிகொண்டு எழும் சர்ச்சை..!
நாராயணப்பாவிடம் சாதி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விசாரித்ததாக சர்ச்சை கிளப்பப்பட்டு இருக்கிறது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார் 85 வயதான முதியவர் நாராயணப்பா. அதுவும் அவர் ஓசூரில் இருந்து வந்து பங்கேற்றார். அவரை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பாராடுத் தெரிவித்தார்.
அந்த முதியவரை சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘’முதுமை உடலுக்குத்தான், உள்ளம் என்றும் இளமையுடன் இயக்கத்திற்காக இயங்கும் எனும் வகையில், குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரின் 84வயது பெரியவர் நாராயணப்பாவிற்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தேன். அவரது கைகளைப் பற்றிய போது, கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு’’என பாராட்டுத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பெரியவரை மு.க.ஸ்டாலின் சந்தித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த வீடியோவில் நீங்கள் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்? கவுடாவா? என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். அதற்கு அந்த முதியவர் கன்னடத்தில் பதில் அளிக்கிறார். பிறகு அந்த முதியவருடன் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
கவுடா என்பது கர்நாடகாவில் உள்ள ஒரு சாதி. இதனை தற்போது சர்ச்சையாக்கி வருகிறார்கள். திமுக ஒரு சாதி கட்சி என்பதை நிரூபித்து விட்டது என சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.