"பணம் கொடுக்காமலே ஜெயிக்கலாம்"-ஸ்டாலின் : "நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்"-மாவட்ட செயலாளர்கள்!
வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், நெருக்கமான மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் ஸ்டாலின் ரிலாக்ஸாக பேசியுள்ளார்.
அப்போது, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள், முஸ்லீம் லீக், கொங்குநாடு உள்ளிட்ட கட்சிகள் நம்மோடு வர உள்ளதால், நமது கூட்டணி வலிமையாகி வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், நமது கூட்டணி வலுவாக இருப்பதால், இப்போது தேர்தல் நடந்தாலும் 185 இடங்களுக்கு குறையாமல் நாம் வெற்றி பெற முடியும்.
அதனால், ஒவ்வொரு ஊரிலும் தொடர்ந்து கூட்டம் நடத்தி கொண்டே இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், பணம் கொடுக்காமல் ஜெயிக்க முடியம் என்றும் அவர் மிகவும் உறுதியாக சொல்லி இருக்கிறார்.
பின்னர், தங்களுக்குள் பேசிக்கொண்ட மாவட்ட செயலாளர்கள், பண விஷயத்தில் மட்டும் ஸ்டாலின் ஏன் இப்படி தவறான முடிவு எடுக்கிறார்? என்று வருத்தப்பட்டுள்ளனர்.
நமக்கு கூட்டணி வலுவாக இருப்பது போலவே, அந்த பக்கமும் வலுவான கூட்டணி அமையாதா? பாஜக, பாமக, தமாகா, முஸ்லீம் அமைப்புகள் ஆகியவை அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதே.
ஸ்டாலின் முதல்வராக வர கூடாது என்பதில் கவனமாக இருக்கும் விஜயகாந்தும் அதிமுக செல்வதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதை எல்லாம் புரிந்து கொள்ளாமல், திமுக கூட்டணியை பற்றியே பேசுவதிலும், ஒரு பைசா கூட பணம் செலவு செய்யக் கூடாது என்பதில் மட்டுமே ஸ்டாலின் கவனமாக இருக்கிறார்.
தற்போதைய நிலையில், இரண்டு அணிகளும் இணைந்து விட்டால், இரட்டை இலை சின்னத்தை வாங்கி விடுவார்கள். அதன் பிறகு பணத்தாலேயே நம்மை புரட்டி எடுத்து விடுவார்கள் என்று சொல்லி மாவட்ட செயலாளர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் கொஞ்சம் பணத்தை கூடுதலாக செலவு செய்திருந்தால், நிச்சயம் ஆட்சியை பிடித்து இருக்கலாம். ஆனால், ஸ்டாலின் எடுத்த தவறான முடிவால், ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது.
ஆனாலும், அவர் தமது நினைப்பை மாற்றிக்கொள்வதாக இல்லை. அந்த நினைப்புதான் நமது பிழைப்பை கெடுக்க போகிறது என்று மாவட்ட செயலாளர்கள் தங்களுக்குள் வருத்தப்பட்டுள்ளனர்.