Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் நடைபெறும் புதிய கல்வி கொள்கை மாநாடு - தமிழக அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

stalin about-new-education-policy
Author
First Published Oct 22, 2016, 12:55 AM IST


டெல்லியில் நடைபெறும் புதிய கல்விக்கொள்கை குறித்த மாநாட்டில்  தமிழக அமைச்சர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையைப் புகுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் உள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கொள்கையை உருவாக்க ஒரு கல்வியாளர் தலைமையில் குழுவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைக்கவில்லை.

 அதற்கு பதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்த குழுவினர் நாடு முழுவதும் கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகளை நடத்தியதாக கூறி, 44 பக்கங்கள் கொண்ட “புதிய கல்விக் கொள்கை வரைவு” ஒன்றை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சக வெப்சைட்டில் வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தின. “தமிழை பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை மடியில் தூக்கி வைத்து தாலாட்ட முன் வருவதா?” என்று புதிய கல்விக் கொள்கையின் மீதான எதிர்ப்பு மாநிலத்தில் காட்டுத் தீ போல் பரவியது. 

இந்நிலையில் புதிய கல்வி்க் கொள்கைக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்திய ஆர்பாட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆலோசனையின் படி பங்கேற்ற நான், “புதிய கல்விக் கொள்கையானது அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகள் போன்ற அனைத்திற்கும் விரோதமாக இருக்கிறது. சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் விதத்திலும் இருக்கிறது” என்று சுட்டிக்காட்டினேன். இது தொடர்பாக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்தேன்.

 இந்த விவாதத்திற்கு பதிலளித்தப் பேசிய மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், “தமிழகத்தில் சமஸ்கிருதம், இந்தி போன்றவற்றை திணிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்கமாட்டோம். தமிழகத்தின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். நமது மொழி, கலாச்சாரம், தன்மை பாதுகாக்கப்படும். சிறுபான்மையினர் நலன் காக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து நன்கு பரிசீலித்து தமிழக அரசின் கருத்து தெரிவிக்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்நிலையில் வருகின்ற 25 தேதி  புதிய கல்விக் கொள்கை மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழுள்ள கட்டாய தேர்ச்சி முறை போன்றவை குறித்து கருத்துகளைக் கேட்க 64-வது “மத்திய கல்வி ஆலோசனைக் குழு” கூட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது. 

முன்பு நடைபெற்ற இது போன்ற 63-வது கூட்டத்தில் மற்ற மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநிலத்தின் சார்பில் கருத்துகளை எடுத்து வைத்தனர். ஆனால் தமிழகத்தின் சார்பில் கல்வி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதில் துணைச் செயலாளர் அந்தஸ்தில் ஒரு அதிகாரியை அனுப்பி, அக்கூட்டத்தில் பங்கேற்க வைத்தது கவலையளிப்பதாக அமைந்து விட்டது.

மாநில உரிமை, சமூக நீதி மற்றும் சமத்துவ உரிமை, இட ஒதுக்கீடு உரிமை, தமிழ் மொழி உரிமை, கல்வி உரிமைச் சட்டம் வழங்கியுள்ள உரிமை,சிறுபான்மையினர் உரிமை என்று ஒட்டுமொத்த நலனை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வரைவு கல்விக் கொள்கையை மாநில அரசு மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும். வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறும் புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில், புதிய கல்விக் கொள்கையால் வரக்கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும் வகையில் ஆணித்தரமான கருத்துகளை எடுத்து வைக்க, அந்த கூட்டத்திற்கு உயர் கல்வித் துறை அமைச்சரை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios