காவிரி பிரச்சனையில் இரண்டாஅம் நாளாக விவசாயிகள், அனைத்து கட்சித்தலைவர்கள் ஆவேச மறியலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சித்தலைவர்களும் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வரும் சூழ்நிலையில் முக்கிய கட்சியான திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மூன்று தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டத்தை தனது இல்லத்தில் நடத்தினார்.

காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக நடக்கும் போக்கை கண்டித்து தமிழகம் முழுதும் பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்துள்ள விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகம் முழுதும் 17,18 தேதிகளில் 48 மணி நேர தொடர் மறியலில் குதித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த மறியலில் சில கட்சிகள் தவிர தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சிகள் கலந்துகொண்டன. தமிழகத்தில் விவசாயிகள் சங்கத்தை ஒருங்கிணைத்து போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் நேற்று பெரம்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட அவர் ஓட்டெரியில் உள்ள ஏசி மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டார். இது தவிர திமுகவின் மற்ற தலைவர்கள் மற்ற மாவட்டங்களில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதிமுக , பாஜக , தேமுதிக தவிர பெரும்பாலான கட்சிகள் இந்த ரெயில் மறியலில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது.
இந்த போராட்டத்தில் நேற்று கலந்து கொண்ட மற்ற தலைவர்கள் இன்றும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் திமுக பொருளாளரும் தமிழக சட்டமன்றத்தில் 89 எம்.எல்.ஏக்களை கொண்டு எதிர்கட்சித்தலைவராக பொறுப்பு வகிக்கும் மு.க.ஸ்டாலின் இன்று போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

தஞ்சை , திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்தை மூன்று மாவட்ட செயலாளர்களுடன் தனது வீட்டில் இன்று மு.க.ஸ்டாலின் நடத்தினார். இத்தனைக்கும் காவிரியில் நீர் திறந்துவிடாததால் கடுமையாக பாதிக்கப்படும் டெல்டா மாவட்டத்தில் உள்ள தஞ்சை தொகுதிக்குமான இடைதேர்தலும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது.![]()

காவிரி பிரச்சனையில் முக்கிய ஆளுங்கட்சியான அதிமுக ஆளுகின்ற கட்சி என்பதால் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, மற்றொரு முக்கிய கட்சியான திமுக காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சியை கூட்டவில்லை என ஆளுங்கட்சியை குறை சொல்லும் வேலையில் முக்கியமான தொடர் போராட்டத்தில் பேருக்கு ஒருநாள் மட்டுமே முக்கிய கட்சியான திமுக கலந்து கொள்வதும் தமிழ்நாட்டில் முக்கியமான காவிரி பிரச்சனையில் போராட்டம் நடக்கும் போது அதில் கலந்துகொள்ளாமல் நவம்பர் மாத கடைசியில் நடக்கும் இடைதேர்தல் வேலையில் இறங்குவதும் விவசாயிகள் பிரச்சனையில் முக்கிய கட்சிக்கும் அதன் தலைவருக்கும் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதையே காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
