அப்செட் செய்த ஸ்டாலின், எஸ்கேப் ஆன வேலுமணி: தளபதிகளின் ஃபாரீன் பயண விளையாட்டு...
அடித்து வெளுக்கும் மழையின் காரணமாக தமிழக தலைநகர் சென்னையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்நிலையில் எதிர்கட்சியின் தளபதி கடல் தாண்டி வேற்று நாடு சென்றிருப்பதும், ஆளுங்கட்சியின் தளபதி அதற்கு திட்டமிட்டு பிறகு கைவிட்டதும் அரசியல் ரீதியாக விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.
தி.மு.க.வின் செயல்தலைவரான ஸ்டாலினை அக்கட்சியினர் ‘தளபதி’ என்றுதான் உணர்வுப்பூர்வமாக அழைக்கின்றனர். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலின் ஆளும் நபர்களுக்கு இணையாக மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்பது நியதி. ஸ்டாலினும் பொதுவாக அதில் குறையொன்றும் வைப்பதில்லை.
இந்நிலையில் தலைநகர் சென்னையை அடைமழை போட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி வட சென்னையில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கிய ஸ்டாலின் மறுநாள் காலையில் தன் மனைவி துர்காவுடன் துபாய்க்கு பறந்துவிட்டார்.
சார்ஜாவில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள சார்ஜா அரசு நிர்வாகம் அழைத்துள்ளதால் அதில் கலந்து கொண்டிருக்கிறார், தனக்கு அன்பளிப்பாக வந்த 1000 தமிழ் புத்தகங்களை புத்தக திருவிழா நிர்வாகத்திடம் வழங்குகிறார். இதற்குப் பின் அங்கிருந்து லண்டன் செல்கிறார் ஸ்டாலின். தனது சொந்த விஷயமாக அங்கு நான்கு நாட்கள் தங்குகிறார் அவர்! என்று தி.மு.க. அறிக்கை வெளியிட்டுள்ளது.
தலைநகரை இப்படி மழை போட்டு ஆட்டும் நிலையில், மழைநிவாரண பணிகளில் கட்சியினரை ஈடுபட செய்வதற்காக தனது ‘நமக்கு நாமே -2’ திட்டத்தை கூட ஒத்திவைத்தவர் திடுதிப்பென இப்படி சார்ஜா, லண்டன் என்று சொந்த பயணமாக சென்றிருப்பது சென்னை மக்களையும், தி.மு.க.வினரையும் ஆச்சரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துடிப்பான தளபதி தலைநகரில் இருந்தால் அக்கட்சியினர் இன்னும் துடிப்பாக உதவிகளை செய்வார்கள்!
அதேபோல் அரசின் நடவடிக்கைகள் மந்தமாக இருந்தால் அதை சுட்டிக்காட்டி சுறுசுறுப்பாக்கிட ஸ்டாலினால்தான் முடியும், அப்பேற்ப்பட்டவர் சென்னை இப்படி கடல் போல் கிடக்கையில் கடல்தாண்டி செல்லலாமா? என்று பொருமுகின்றனர் மக்கள்.
எதிர்கட்சி முகாமில் மட்டுமில்லை ஆளுங்கட்சி தரப்பிலும் இப்படியொருவரின் பயணம் மக்களை அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல், நிர்வாகம் உள்ளிட்ட அத்தனை விஷயங்களிலும் உறுதுணையாக இருந்து அவரது அரசின் தளபதி போல் செயல்படுபவர் அமைச்சர் வேலுமணி. அமைச்சரவை வட்டாரம் அவரை எடப்பாடியின் தளபதி என்றுதான் அழைக்கிறார்கள்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரான வேலுமணியின் பங்கும், பணிகளும் இப்போது தலைநகருக்கு மிகவும் அவசியம். இந்நிலையில் அவரும் நாளை முதல் 6 நாட்கள் பயணமாக ஆஸ்திரேலியா செல்ல இருந்தார். மழைநீர் வடிகாலுக்கு தீர்வு காண வளர்ந்த நாடுகளில் பின்பற்றும் முறைகளை ஆய்வு செய்யவே இந்த பயணம் என்று சொல்லப்பட்டது.
தலைநகரை தண்ணீர் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சம்பந்தப்பட்ட பொறுபிலுள்ள அமைச்சர் இப்படி செல்வது நியாயமா? என்று ஆளாளுக்கு தாளித்தெடுத்தனர்.
முதல்வரும் இந்த பயணத்தை ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். விளைவு, வேலுமணியின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கூடவே “இது இப்போது போடப்பட்ட பயணதிட்டமல்ல. முன்னரே போடப்பட்டிருந்தது. இப்போது மக்கள் பணி கருதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடைசி நொடியில் விமர்சனங்களிலிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார் வேலுமணி.
மக்களுக்காக தங்கள் கட்சி நிர்வாகி அரசு முறை பயணத்தையே கேன்சல் செய்திருக்கிறார், ஆனால் ஸ்டாலினோ இப்படியொரு இக்கட்டான சூழலில் முழுக்க முழுக்க சொந்த பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுதான் அவரது அரசியல்!...என்று போட்டுத்தாக்குகின்றனர் அ.தி.மு.க.வினர்.