special political write up about dmk active chief stalin

கண் முன்னே கடந்து போகும் கடைசிப் பேருந்து போல, ஜெ., மரணத்துக்குப் பின் முதல்வர் பதவியை எட்டிப் பிடிக்கும் சூழல்கள் ஸ்டாலினின் கை முன்னே வந்து போயின. ஆனால் ’புறக்கடையில் ஆட்சிக்கு வருவது தலைவருக்கு பிடிக்காது’ என்று ஏதேதோ காரணம் சொல்லி வாய்ப்பை வீணடித்துவிட்டார் என்பது அவரது கட்சி சீனியர்களின் குற்றச்சாட்டு. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் மக்களின் அபிமானத்தை வென்று நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கிறேன்! என்று முடிவெடுத்தார் ஸ்டாலின். அதற்காக குட்கா ஊழல் விவகாரம், போக்குவரத்து ஸ்டிரைக், பேருந்து கட்டண உயர்வு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்...என்று மக்கள் பிரச்னைகளில் மளமளவென போராட்டங்களை முன்னெடுத்தார். பி.ஜே.பி. மற்றும் அ.தி.மு.க.

அரசாங்கங்களை எதிர்த்து தொடர்ந்து ஸ்டாலின் களமாடியது துவக்கத்தில் மக்களை பெருமிதப்பட வைத்தன. ஆனால் நாளடைவில் ‘போராட்டமே தினப்படி வாழ்க்கையா?’ என்று சற்றே அதிருப்தி கொண்டனர். ரயில் மறியல், பேருந்து மறியல், கடையடைப்புகள் ஆகியன மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்ததன் விளைவு இது. மக்களின் இந்த மனஓட்டத்தை புரிந்து கொண்ட ஆளுங்கட்சியானது ’போராட்டம் எனும் பெயரில் மக்களை வதைக்கிறார் ஸ்டாலின்’ என்று பிரச்சாரத்தை கொளுத்திப் போட்டன. அது உண்மையிலேயே மக்கள் மத்தியில் ஸ்டாலின் மீது அதிருப்தியை உருவாக்கியது. இதில் மனிதர் அநியாயத்துக்கு அப்செட்டாகி கிடக்கிறார். 

அதேபோல் அ.தி.மு.க. அரசுக்கு செக் வைக்கும் நோக்கில் தி.மு.க. போடும் வழக்குகள் அத்தனையும் அடுத்தடுத்து மண்ணைக் கவ்வுவதும் அவரை கடும் கடுப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன. ’சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படத்தை அப்புறப்படுத்த வேண்டும்!’ என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தொடர்ந்து வழக்காகட்டும், ’பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தகுதியை ரத்து செய்ய வேண்டும்.’ என்று தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்காகட்டும், இரண்டுமே நீதிமன்றத்தால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்யப்பட்டது ஸ்டாலினை மனரீதியாக பெரும் சோர்வுக்கு ஆளாக்கியுள்ளது. 

மக்கள் மற்றும் அரசியல் மன்றத்தில் தனக்கு தொடர்ந்து கிடைத்து வரும் இந்த சறுக்கல்கள் ஸ்டாலினை பல நேரங்களில் பிரஷராக்குகின்றன. இதனால் அருகிலிருக்கும் நிர்வாகிகளிடம் கடிந்தும், எரிந்தும் விழுகிறாராம் எடுத்ததுக்கு எல்லாம். எந்த தகவலையும் அவரிடம் கொண்டு சேர்க்கவே பயந்து நடுங்குகிறார்கள் உதவியாளர்கள். எல்லாமே எதிர்மறையாக போவது அவரை அதிர்ச்சியுறவே வைத்துள்ளது. இதன் விளைவே இந்த கோபம். 

ஸ்டாலினின் கோபத்தின் பின்புறமிருக்கும் சூழலை புரிந்து கொண்டிருக்கும் சீனியர் நிர்வாகிகள் ‘தளபதியை பார்த்தால் பாவமாகத்தான் இருக்குது. ஆனால் கைக்கு எட்டிய வாய்ப்பை கண்டுக்காமல் விட்டது யாருடைய தவறு? இப்போ நம்மை திட்டி தன்னோட ஆத்திரத்தை தணிச்சுக்கிறார். பரவாயில்லை, எப்படியோ அவரது ஆதங்கம் குறைஞ்சா சரி.’ என்று தங்களுக்குள்ளேயே சமாதானம் சொல்லிக் கொள்கின்றனர். 

விடுங்க செயல்தல, உங்களுக்கும் ஒரு நாள் வரும்!