#BREAKING அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்த வழக்கு.. ஓபிஎஸ், இபிஎஸ்க்கு புதிய தலைவலி..!
தனது பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆகையால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.
அதிமுகவில் இருந்து நீக்கிய போது, தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு சம்மன் அனுப்ப எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுகவை விமர்சித்தார். இதனையடுத்து, பாமகவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என்றார். இதனையடுத்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து புகழேந்தி நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கடந்த ஜூன் மாதம் அறிவித்தனர்.
அதில், கட்சி விரோத செயல்களில் ஈடுட்டதால் நீக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், தனது பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆகையால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது. இப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்ட முதல் நபராக எடப்பாடி பழனிசாமி, 2வது நபராக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி , ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 24-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.