கொரோனா நெருக்கடியில் தீபாவளி சிறப்பு பேருந்து..?? போக்குவரத்துத் துறை அமைச்சர் அதிரடி ஆலோசனை, முக்கிய முடிவு
கொரோனா தாக்கம் காரணமாக பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி சிறப்பு பேருந்துகள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலோர் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக பேருந்துகளில் செல்வது வழக்கம்.
இதனை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று மாலை நடைப்பெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர், போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தின்போது செய்யவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், கொரோனா தாக்கம் காரணமாக பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் முன்பதிவு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு போக்குவரத்து துறை சார்பில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.