Special article about velumani and edappadi

முதலமைச்சரும், அமைச்சரவையில் உள்ள சக அமைச்சரும் அதீத நட்பு பாராட்டுவதென்பது அ.தி.மு.க.வில் சாத்தியமில்லாத ஒன்று. என்னதான் எம்.ஜி.ஆர். தனது அமைச்சரவை நபர்களிடம் தோளில் கை போட்டு பேசினாலும் கூட அவர்களின் உடலும், மனசும் நடுங்கிக் கொண்டுதான் இருக்கும். 

அவருக்குப் பின் முதல்வரான ஜெயலலிதாவை பற்றி சொல்லவே வேண்டாம். ஜெயலலிதாவின் போட்டோவை உற்றுப் பார்த்தாலே பல அமைச்சர்களுக்கு வியர்த்துக் கொட்டிவிடும். அது நடிப்போ அல்லது உண்மையிலேயே பயமோ தெரியாது! ஆனால் சூழல் இப்படித்தான் இருந்தது.

பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவின் கண்காணிப்பு இருந்து கொண்டே இருந்ததால் அவரும் ஒரு கோட்டை தாண்டி வரவில்லை.

ஆனால் இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் வித்தியாசமான அ.தி.மு.க. முதல்வராக இருக்கிறார். அமைச்சரவையில் உள்ள ஒரு சில அமைச்சர்களுடன் ஏக அணுசரணையாக இருக்கிறார், நட்பில் அளவளாவுகிறார். குறிப்பாக தங்கமணி, வேலுமணி இருவரும் எடப்பாடியாரின் மிக நெருங்கிய சகாக்கள் எனலாம். அதில் தங்கமணியாவது உறவினராகிறார் ஆனால் வேலுமணி அப்படியில்லை என்றாலு எடப்பாடியாருக்கு ஏக நெருக்கம்தான். 

சென்னையிலிருந்து தன் சொந்த ஊருக்கு முதல்வர் செல்ல வேண்டுமென்றால் கோவை வரை விமானத்தில் சென்றுதான் மீண்டும் சென்னை நோக்கிய பாதையிலிருக்கும் சேலத்தை காரில் அடைகிறார். திரும்பும் போதும் இப்படித்தான். முதல்வர் கோவைக்கு செல்லும்போதெல்லாம் அம்மாவட்ட அமைச்சர் எனும் முறையில் வேலுமணி அங்கே நின்று அவரை வரவேற்பதும், வழியனுப்புவதுமாய் இருக்கிறார். இதனால் இவர்களுக்குள் நட்பு வலுத்திருக்கிறது. 

இந்த நெருக்கம் சமீபத்தில் கோவையில் நடந்த அரசு விழாவில் முதல்வரின் பேச்சில் பளீரிட, வேலுமணி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம். கோவை காந்திபுரத்தில் நூற்று இருபது கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் முதல் அடுக்கை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடும் நிகழ்வில் கலந்து கொண்டார் முதல்வர். சென்னையில் மழை உச்சம் தொடும் இக்கட்டான சூழலிலும், வேலுமணிக்கு கொடுத்த டேட்டில் விழாவில் கலந்து கொண்டு நட்பை காப்பாற்றினார் முதல்வர் என்கிறது வேலுமணியின் ஆதரவு வட்டாரம். 

இவ்விழாவில் பேசிய எடப்பாடியார் “இந்த பாலத்தை திறந்துவிட்டோம், மற்றொரு பாலம் விரைவில் திறக்கப்படும். இதுபோக கோவைக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என்பதை இங்கு நடை பெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவிப்போம். கோவைக்கு ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி இம்மாவட்டத்தை தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்றுவோம்.” என்று பேசியபோது வேலுமணியின் முகம் மின்னியது. 

ஏதோ தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்துக்கு நிகராக கோவையை எண்ணி எடப்பாடியார் பேசுவதும், செயல்படுவதும், இங்கு வந்து நிற்பதும் வேலுமணியின் நட்புக்கு அவர் தரும் அங்கீகாரம்...என்று புல்லரிக்கிறார்கள் கோவை அ.தி.மு.க.வினர். 

அதேவேளையில் இம்மாவட்ட எதிர்கட்சிகளோ “நட்புமில்ல, ஒண்ணுமில்ல. சசி டீமை எதிர்த்து அரசியல் பண்ணணும்னா வேலுமணி, தங்கமணின்னு தனது கொங்கு மண்டல சகாக்களின் ஒத்துழைப்பு எடப்பாடியாருக்கு தேவை. அதனாலதான் இவ்வளவு ஒத்துமை காட்டுறார். இவங்களை பகைச்சுக்கிட்டா, தென் தமிழ்நாட்டு டீம் மறுபடியும் ஆட்சிக்கு மேலே வந்து ஆட ஆரம்பிச்சிடும் அப்படிங்கிறது எடப்பாடியாரின் பயம். இதுதான் உண்மை!” என்று புகைகிறார்கள். 

எது உண்மையா இருந்தா என்ன, எங்களுக்கு நல்லது நடந்தா சரி! என்று காலர் தூக்குகிறார்கள் கோவைவாசிகள்.