சபாநாயகர் பொறுப்பை கருத்தில்கொண்டு பெண் எம்.எல்.ஏ.க்களை கண்ணியத்தோடு நடத்த வேண்டும் - திருநா. அட்வைஸ்...
நாகப்பட்டினம்
சபாநாயகர் அவர் இருக்கிற பொறுப்பை கருத்தில்கொண்டு, பெண் எம்.எல்.ஏ.க் களை கண்ணியத்தோடு நடத்த வேண்டும் என்று காஞ்சிரசு கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் காங்கிரசு கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், நேற்று வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தந்தார். அங்கு பிரார்த்தனையை முடித்துவிட்டு பேராலய அதிபரை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் அவர் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் விஜயதாரணி எம்.எல்.ஏ.வை, பெண் என்றும் பாராமல் கட்டாயப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தும் வகையில் பலவந்தப்படுத்தி வெளியே இழுத்து சென்றுள்ளனர். சட்டமன்ற சபாநாயகர், தன்னை தரக்குறைவாக நடத்தியதாக அவர் வேதனைப்பட்டிருக்கிறார்.
சபாநாயகர் அவர் இருக்கிற பொறுப்பை கருத்தில்கொண்டு, பெண் எம்.எல்.ஏ.க் களை கண்ணியத்தோடு நடத்த வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வருவதே குறைவு. எம்.எல்.ஏ.வாக வருவது அதைவிட குறைவு. அவ்வாறு வரும் பெண்களை கண்ணியக்குறைவாக நடத்துவது வேதனை அளக்கிறது. இதனை காங்கிரசு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், இந்த அரசு ஆழமாக யோசித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் காவல்துறை மூலம் கைது செய்வது, வழக்கு போடுவது என்ற வகையில் போராட்டங்களை அடக்க முடியும் என நினைப்பதுதான் காரணமாகும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடியவர்களையும், சேலத்தில் பசுமை சாலை திட்டத்திற்கு போராடுபவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். அதை வன்மையாக கண்டிக்கிறேன்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால், இன்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை முன்கூட்டியே அமைத்திருந்தால் இந்நேரம் தண்ணீர் கிடைத்திருக்கும்.
மத்திய அரசு கர்நாடக தேர்தலை கருத்தில்கொண்டு இதனை தள்ளிப்போட்டு வந்தது. தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் பலம் வாய்ந்த அமைப்பாக செயல்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.