எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்தது ஏன்..? சபாநாயகர் அப்பாவு விளக்கம்
எதிர் கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் 4 கடிதமும்,ஓ.பி.எஸ் தரப்பு இரண்டு கடிதமும் அளித்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் சட்டசபை கூட்டம்
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் 19 ம் தேதி வரை இரண்டு நாட்கள் பேரவை கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஓபிஎஸ் இருக்கை- சபாநாயகர் தகவல்
எதிர் கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் 4 கடிதமும் ஓ.பி.எஸ் தரப்பு இரண்டு கடிதமும் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் கடிதம் கொடுத்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் பட்சத்தில் உரிய பதில் பேரவையில் அளிக்கப்படும் என கூறினார். இது குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக சபாநாயகர் தெரிவித்தார். எதிர்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து கடிதம் அளித்துள்ள அதிமுக உறுப்பினர்கள் தனது அறைக்கு வந்து இதற்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறினார். அதிமுகவின் பொன்விழா காரணமாக இன்றைய பேரவை கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், நாளை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தான் கருதுவதாகவும் அப்பாவு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
ஒரு சிலரின் நலனுக்காக அதிமுக சட்ட விதியில் மாற்றம்..! இபிஎஸ்யை விளாசிய ஓபிஎஸ்