எதிர்கட்சிகளை ஒன்றிணைத்த திமுக..டெல்லியில் ‘கெத்து’ காட்டிய ஸ்டாலின்.. இது பீஸ்ட் மோட் !!
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா கருணாநிதி அறிவாலயம் டெல்லியில் கட்டப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட இந்த விழாவில் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லி - அறிவாலயம் திறப்பு :
இந்த விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். விழாவில் பங்கேற்க அண்ணா- கலைஞர் அறிவாலயத்துக்கு மாலை 4.15 மணிக்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார்.
அவரைத்தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உள்பட முக்கிய பிரமுகர்கள் வந்தனர். சிறப்பு விருந்தினர்களை கனிமொழி எம்.பி. வரவேற்று அழைத்து வந்தார்.
மம்தா - கே.சி.ஆர் புறக்கணிப்பா ? :
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அப்போது அலுவலக காரணங்களை இருவரும் குறிப்பிட்டதாக தெரிகிறது.
இதன் மூலம் இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் விடுக்கும் அழைப்பு ஒன்றிற்கு வராமல் இரண்டு தலைவர்களும் புறக்கணித்து உள்ளனர். இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சோனியா தலைமை வகிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள மம்தா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கேசிஆரும் இதே காரணத்திற்காக இந்த நிகழ்வை புறக்கணித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ட்விஸ்ட் கொடுத்த அகிலேஷ் :
ஆனால் நேற்று அகிலேஷ் யாதவ் வந்தது முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் காங்கிரசுடன் சமாஜ் வாதி கடுமையாக மோதிய பின் நேற்று நடந்த இந்த சந்திப்பு இரண்டு தரப்பிற்கும் இடையில் ஒரு விதமான நட்பை மீண்டும் ஏற்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது 2024 தேர்தலுக்கு பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு அச்சாரமாக இருக்குமா ? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.