அதிமுக ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர்கள்!!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனிடம் தோல்வியடைந்ததை அடுத்து நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சில அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை.
அதிமுகவிலிருந்து ஆட்சியாளர்களால் ஓரங்கட்டப்பட்ட தினகரன், ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். தினகரனுக்கு பழனிசாமி அணியிலிருக்கும் எம்பி செங்குட்டுவன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் சில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தினகரன் பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியதால் ஆட்சியாளர்கள் கலக்கமடைந்தனர்.
இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆர்.கே.நகர் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டதைவிட கட்சியினர் தினகரன் பக்கம் சென்றுவிடாமல் தடுக்க என்ன செய்வதென்றே அதிகமாக விவாதித்துள்ளனர்.
கட்சியினர் தினகரன் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே தினகரனின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து அவர்கள் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டிற்கு சென்றுவிட்டனரோ என்ற சந்தேகம் எழுந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, நான் ஊர் திரும்பிய பிறகு கூட்டத்துக்கான அழைப்பு வந்தது.
உடனடியாக திரும்ப முடியாது என்பதால், சரி அங்கேயே இருங்கள் என்று கூறிவிட்டனர். தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஒரு இயக்கம் அழிந்துவிடாது என்று கூறினார்.
முதல்வர் அனுமதியின்பேரில்தான் நானும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் டிசம்பர் 31-ம் தேதி நடக்கவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை பார்வையிட வந்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.