“யாதுமாகி நின்ற கலைஞர் ” – 94 ல் சில நினைவுகள்…
கலைஞர் என்று அழைக்கப்படும் மு.கருணாநிதி தற்போதுள்ள இந்திய அரசியல் தலைவர்களில் மூத்தவர். சுமார் 50 வருடங்களாக திமுக என்ற கட்சியின் தலைவர்.
13 முறை தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றவர். தேர்தலில் தோல்வியே சந்திக்காத தலைவர். 5 முறை தமிழக முதல்வர் பதவி வகித்தவர்.
தற்போதைய நாகை மாவட்டம் திருக்குவளை என்னும் இடத்தில் 1924 ம் ஆண்டு ஜூன் மாதம் 3 ம் தேதி பிறந்தார். தந்தை முத்துவேலர். தாயார் அஞ்சுகம் அம்மாள். பெரியநாயகம், சண்முக சுந்தரம் மூத்த சகோதரிகள் இரண்டு பேர். இவர் கடைசி பிள்ளை.
ஆரம்ப கல்வியை திருக்குவளையிலும், உயர்நிலை கல்வியை திருவாரூரிலும் முடித்தவர். சிறு வயதிலேயே, கதை, கவிதை, கட்டுரை, பேச்சு என பன்முக தன்மை கொண்டவராக திகழ்ந்தார்.
தமது 12 வயதிலேயே, பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சால் கவரப்பட்டு. நீதிக்கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர். மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டங்களில் பங்கேற்க வைத்தார்.
அதே வயதில் “மாணவர் நேசன்” என்ற கையெழுத்து பிரதியையும் தொடங்கி நடத்த ஆரம்பித்தார். இவரது செயல்பாடுகளால் அண்ணாவின் பாராட்டுக்களை பெற்றார்.
1942 ம் `முரசொலி’ பத்திரிகையை தொடங்கினார். அது 1960 முதல் நாளேடாக வெளிவர தொடங்கியது, இன்றும் அது திமுகவின் அதிகாரபூர்வ நாளேடாகவே விளங்குகிறது.
முரசொலியில் அவரது கடிதங்களும், கேள்வி-பதிலும் அவரது தம்பிகளை வீரம் குறையாத லட்சிய தொண்டர்களாய் வைத்திருக்கிறது.
பெரியாரின் திராவிடர் கழகம், அண்ணாவின் திமுக என தமது பாதையை தாமே செதுக்கி கொண்ட கருணாநிதி, 1969 ல் இருந்து இன்றுவரை திமுகவின் தலைவராக தொடர்கிறார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம், கல்லக்குடி போராட்டம், சட்ட எரிப்பு போராட்டம் ஆகியவை கலைஞரை, தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திய போராட்டங்கள்.
1957 ல் தொடங்கிய அவரது தேர்தல் வெற்றி 2016 வரை 13 தேர்தல்களில் தொடர்ந்தது. 1984 ல் நடந்த தேர்தலில் மட்டும் அவர் போட்டியிடவில்லை.
1967 ல் திமுக வெற்றி பெற்று அண்ணா முதல்வர் ஆனார். அந்த அமைச்சரவையில் கலைஞர், போக்குவரத்து மற்றும் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில்தான் போக்குவரத்து அரசுடமை ஆக்கப்பட்டது.
அண்ணா 1969 ல் மறைந்ததையடுத்து கலைஞர் முதல்வர் ஆனார். அதை தொடர்ந்து 1971 ல் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. மீண்டும் கலைஞர் முதல்வர் ஆனார்.
அதன் பின்னர், இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையால், கடும் பாதிப்புகளுக்கு ஆளானாலும், அந்த நெருக்கடிகளை எல்லாம் மிகவும் துணிவாக எதிர்கொண்டு மீண்டு வந்தவர் கலைஞர்.
எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக தொடங்கிய பின்னர் 1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆரே முதல்வராக இருந்தார். அப்போதும் கட்சியை ராணுவ கட்டுப்பாட்டுடன் நடத்திய சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தவர் கலைஞர்.
கருணாநிதியின் முதல் மனைவி பெயர் பத்மாவதி சிறு வயதிலேயே இறந்து விட்டார். இவருக்கு பிறந்தவர் மு.க.முத்து. இரண்டாவது மனைவி பெயர் தயாளு அம்மாள். இவருக்கு அழகிரி, செல்வி, ஸ்டாலின், தமிழரசு என நான்கு பிள்ளைகள். மூன்றாவது மனைவி பெயர் ராஜாத்தி அம்மாள். இவருக்கு ஒரு மகள், கனிமொழி.
அரசியலில் தமது குடும்பத்துக்கே முன்னுரிமை கொடுத்தார் என்று கலைஞர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. ஆனாலும் அவர் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களையும், சீர்திருத்த மாற்றங்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கப்படும் கலைஞர், நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கியத் தளங்களிலும் இயங்கியிருக்கிறார் கருணாநிதி. திரை துறையில் திருப்பு முனையை ஏற்படுத்தியவரும் இவரே.
கருணாநிதிக்கு எத்தனையோ பட்டங்கள், அடைமொழிகள் இருந்தாலும், கலைஞர் என்ற அடைமொழியையே அவர் விரும்புவார். அந்த அடைமொழியை கலைஞருக்கு வழங்கியவர் எம்.ஆர்.ராதா.
சுதந்திர தினத்தன்று கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைக்கும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு பெற்று தந்தவர். குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர். மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டத்தைக் கொண்டு வந்தவர்.
மாற்று திறனாளிகள், திருநங்கைகள் போன்ற வார்த்தைகளை அளித்தவர் என்று அவரது திட்டங்களையும், பட்டங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற 5 முதல்வர்களை எதிர்த்து அரசியல் செய்தவர். இன்று வயது முதிர்வு காரணமாக, அவரால் பேசவும், எழுதவும் முடியவில்லை. ஆனால் அவரது பெயரையும், புகழையும் உலகமே பேசுகிறது.