ஆட்சியா? கட்சியா? சின்னமா? சமூக வலைதளவாசிகளின் கருத்து பதிவு....
இரட்டை இலை சின்னம், எடப்பாடி - பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு வழங்கப்பட்டதை சிலர் வரவேற்கலாம். சிலர் விமர்சிக்கலாம்.
1989 சட்டமன்ற தேர்தலில் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிரிந்தபோதும் இரட்டை இல்லை சின்னம் முடக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி, அதிக வாக்குகளை பெற்ற ஜெயலலிதா, அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றினார்.
அதன் பிறகு இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. ஜானகி அரசியலை விட்டு ஒதுங்கினார். ஆனால், தற்போதைய நிலை வேறு. அப்போது ஜெயலலிதா என்ற ஆளுமை உள்ள, மக்கள் செல்வாக்கு நிறைந்த தலைவர் ஒருவர் இருந்தார்.
தற்போது, அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவை பெரும் தலைவர்கள் என்று யாரையும் சொல்லும் நிலை இல்லை. இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும், அதற்கென்று கணிசமான வாக்குகள் விழலாம். இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம். ஆனால் பொது தேர்தலில் வெற்றி பெறுவது என்பது கேள்விக்குறியே.
அதிமுக என்ற ஒட்டுமொத்த கட்சியை கட்டுப்படுத்தும் வலிமை சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரனுக்கு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவரை தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்றும் யோசிக்க வேண்டி உள்ளது. ஏனென்றால், சசிகலா தரப்பினர் மீதான மக்களின் வெறுப்பு இன்னும் குறைந்ததாக தெரியவில்லை.
மறுபக்கம், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, தொண்டர்கள் மற்றும் மக்களால் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான தலைவர் ஒருவரை அதிமுக தேர்ந்தெடுக்காத வரை, இரட்டை இலை சின்னம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை.
எனவே அதிமுகவை காப்பாற்ற, இரட்டை இலை சின்னம் மட்டும் போதாது, தொண்டர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ளும் தலைமையே இப்போதைய தேவை. ஆட்சியை இழந்தாலும், கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வலிமையுள்ள தலைமை, அதிமுகவிற்கு கிடைத்தால் மட்டுமே, அந்த கட்சி காப்பாற்றப்படும்.
அதிமுகவில் இப்போது இருக்கும் இரண்டு அணிகளில் தொண்டர்கள் மற்றும் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பதை அறிய, அடுத்த தேர்தல் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்கலாம். இரு அணிகளும் வெவ்வேறு சின்னத்தில் நின்று தங்கள் பலத்தை நிரூபித்த பின்னால், சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பதை முடிவு செய்யலாம். 1989 தேர்தலில், ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும், ஜானகிக்கு இரட்டை புறா சின்னமும் வழங்கப்பட்டது அப்படித்தான்.