ஆன் லைனில் பாடம் நடத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்... அதிரடி அறிவிப்பு..!
50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கல்லூரி, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இதனால் பெற்றோர்கள் மத்தியில் குழந்தைகளின் கல்வி குறித்து கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தசூழ்நிலையில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்று கொடுக்க பல மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவ- மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலாது. இதை கருத்தில் கொண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போகன்கள் வழங்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளன. கொரோனா காலத்தில் மாணவிகள் ஆன்-லைன் மூலம் கல்வி கற்க முன்னுரிமை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஆன் லைன் மூலம் பாடம் நடத்த ஸ்மார்ட் போன்களை பஞ்சாப் மாநில அரசு வழங்க இருக்கிறது.