இந்நிலையில் அப்பட்டமாக கொலை மிரட்டல் விடும் ஒரு சாதி தலைவரை கைது செய்யாமல் விட்ட அரசுதான் இவ்வளவு தூரம் பிரச்சினை வளர்ந்ததற்கு ஒரே காரணம் என்றும், தாக்குவோம் அடிப்போம் என்று மிரட்டல் விடுத்தவரை சில மணி நேரத்தில் தூக்கி உள்ளே வைத்திருந்தால் இத்தனை சாதி ஆணவ பேச்சுக்களும் நடவடிக்கைகளும் தொடர்ந்திருக்குமா?

ஜெய்பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பாமகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில் அவர்கள் சூர்யாவின் பேனரை சுற்றி நின்று தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மெல்ல மெல்ல இந்த விவகாரம் மோதலாக உருவெடுத்துள்ள நிலையில் இதில் தமிழக அரசு தலையிட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய்பீம், இந்தப் படம் பழங்குடியின சமூக மக்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிகார வெறிக்கு அம்மாக்கள் இரையாவதை ஒரு உண்மை சம்பவத்துடன் தொடர்பு படுத்தி தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது ஜெய்பீம், அதே நேரத்தில் இந்தப் படத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்திற்கு வைத்துள்ளதாக கூறி பாமகவினர் சர்ச்சை எழுப்பியுள்ளனர். அதேபோல் இந்த படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் வன்னியர்களின் அடையாளமாக அக்னிசட்டி காட்டியிருப்பதும் திட்டமிட்டே வன்னியர்களை இழிவுபடுத்தும் செயல் எனகூறி சூர்யாவுக்கு எதிராக பாமக உள்ளிட்ட வன்னிய ஆதரவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

வன்னிய மக்களிடம் பகிரங்கமாக சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும், அத்துடன் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வன்னியர் சங்கத்தின் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இயக்குனர் ஞானவேல் மற்றும் ஓடிடி தளமான அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் அன்புமணி எழுதிய கடிதத்திற்கு சூர்யா பதில் கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து சூர்யா மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும், இல்லாவிட்டால் அவர் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாமகவினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் அசாதாரண சூழ்நிலையை எட்டியுள்ளது. சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை விடப்போவதில்லை என்று பாமகவினரும் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே சூர்யாவை எதிர்த்து போராட்டங்களிலும் பாமகவினர் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஓர் ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் நடிகர் சூர்யாவின் பேனரை செருப்பால் தாக்கி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பின்னர் அந்த பேனரை அவர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. 

Scroll to load tweet…

இந்நிலையில் அப்பட்டமாக கொலை மிரட்டல் விடும் ஒரு சாதி தலைவரை கைது செய்யாமல் விட்ட அரசுதான் இவ்வளவு தூரம் பிரச்சினை வளர்ந்ததற்கு ஒரே காரணம் என்றும், தாக்குவோம் அடிப்போம் என்று மிரட்டல் விடுத்தவரை சில மணி நேரத்தில் தூக்கி உள்ளே வைத்திருந்தால் இத்தனை சாதி ஆணவ பேச்சுக்களும் நடவடிக்கைகளும் தொடர்ந்திருக்குமா? மிரட்டியவரை தூக்கி உள்ளே வைக்காமல் சூர்யாவின் விட்டுக்கு மட்டும் காவல் போடுவதற்குதான் இவ்வளவு அதிகாரத்தை உங்களுக்கு தூக்கி கொடுத்து இருக்கிறார்களா மக்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில் நடிகர் சூர்யாவுக்கு திரைத்துறையில் ஆதரவு பெருகி வரும் நிலையில், சமூக வலைதளத்திலும் ஆதரவு அதிகரித்து வருகிறது. மெல்ல இந்த விவகாரம் அசாதாரண சூழலை எட்டியுள்ள நிலையில் இதில் அரசு தலையிட்டு தடுத்தால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவாய்ப்புள்ளது. எனவே அரசு உடனே இதில் தலையிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. நிலைமையை கவனித்து வரும் அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் தலையிடுமா..?