ஓடி ஓடி ஆட்டம் காட்டிய சிவசங்கர் பாபா.. டெல்லியில் மடக்கி பிடித்த போலீஸ்.. சென்னைக்கு அழைத்துவர முடிவு.
அவர் தப்பியோடி இருக்கலாம் என்ற அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரை தேடும் பணியில் முடுக்கி விடப்பட்டன். மேலும், சிவசங்கர் பாபா நேபாளம் தப்பிச் செல்லாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடி, டெல்லி காசியாபாத் பகுதியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதற்கான தகவலை சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர், அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது 3 புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி கடந்த 13 ஆம் தேதி டி.ஜி.பி திரிபாதி உத்தவிட்டார். மாணவிகள் மூலம் பெறப்பட்ட 3 புகார்களின் அடிப்படையில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பொக்சோ வழக்கு உள்ளிட்ட 3 தனித் தனி வழக்குகளை 3 தனிப்படைகள் அமைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவசங்கர் பாபா உடல்நலக் குறைவு காரணமாக டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தரப்பில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான சுசில் ஹரி பள்ளி நிர்வாகி ஜனனி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் தனிப்படையொன்று டேராடூனுக்கு நேற்று விரைந்தது. மற்ற இரு குழுக்கள் சுசில் ஹரி பள்ளிக்கு நேரடியாகச் சென்றும், புகார் அளித்த மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றும் சிவசங்கர் பாபா-விற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க அவருக்கு நேற்றைய தினமே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் டேராடூனுக்கு சென்ற தனிப்படையினர் மூலம் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இல்லை என்ற தகவல் தெரியவந்தது.
அவர் தப்பியோடி இருக்கலாம் என்ற அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரை தேடும் பணியில் முடுக்கி விடப்பட்டன். மேலும், சிவசங்கர் பாபா நேபாளம் தப்பிச் செல்லாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தப்பியோடிய சிவசங்கர் பாபாவை உத்தரகாண்டில் உள்ள அவருக்கு சொந்தமான ஆசிரமங்களில் தனிப்படை போலீசார் தேடினர், ஆனால் அங்கும் அவரை காணவில்லை. இதனால் உத்ரகாண்ட், தில்லியில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர். உத்ரகாண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி தில்லிக்கு சென்று அங்கு காசியாபாத் பகுதியில் சிவசங்கர் பாபா பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றோ அல்லது நாளையோ அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.