தொடரும் பட்டாசு விபத்துக்களை தடுக்க கூடுதல் கவனம் எடுத்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. செயலிழந்துள்ள தமிழக அரசு இத்தகையப் பணிகளில் அலட்சியம் காட்டுவதன் விளைவாக அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுகிறது.என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 சிவகாசியில் பட்டாசு கடையும் , கிடங்கும் உள்ள இடத்தில் ஏற்பட்ட விபத்தில் தீபாவளி பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. 

அண்மைக் காலமாக தீபாவளி பண்டிகை நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய வெடிவிபத்துகள் அதிகரித்து வருகிறது. அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அருகே புளிச்சப்பள்ளத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடித்ததில் 5 பேர் மரணமடைந்தனர்.

பண்டிகை காலங்களில் பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் அதிகமாக இருக்கும் என்பதால் வெடிமருந்துகளின் பயன்பாடும் கூடுதலாக இருக்கும். அத்தகைய நேரத்தில் உரிய பாதுகாப்பு முறைகள் கையாளப்படுகின்றனவா என்பதை பரிசோதிப்பதுடன் காவல்துறை-தீயணைப்புத்துறை ஆகியவையும் கூடுதல் கவனம் எடுத்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

 செயலிழந்துள்ள தமிழக அரசு இத்தகையப் பணிகளில் அலட்சியம் காட்டுவதன் விளைவாக அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுகிறது.இனியாவது அலட்சியம் காட்டாமல் துரிதமாக செயல்பட்டு, பண்டிகை நேர விபத்துகளைத் தடுத்து, உயிர்ப்பலி ஏற்படாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதுடன், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், பாதிப்படைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடுபவர்களுக்குத் தேவையான அவசிய சிகிச்சையையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். 

பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.