முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி அதிமுகவினர் நூதன வேண்டுதலில் ஈடுபட்டு வருகின்றனர். மண்சோறு, அங்கபிரதட்சணத்தை அடுத்து, பறவைக்காவடி, வெள்ளியால் செய்யப்பட்ட நுரையீரல் காணிக்கைகள் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டிய அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.எல்.எ.க்கள், உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய், பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் மண்சோறு, அங்கபிரதட்சணம், பூஜைகள், யாகங்கள் உள்ளிட்ட பல வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரையில் நேற்று பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் செல்லூர் ராஜு கையில் வேல் ஏந்தி சென்றார். அதிமுகவினர் பறவைக் காவடி எடுத்தும் வேண்டுதலில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் பிரச்சனை தீர வேண்டி, நெல்லையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் நூதன வேண்டுதலில் ஈடுபட்டார். அதாவது, வெள்ளியால் செய்யப்பட்ட நுரையீரல் ஒன்றை நெல்லையில் உள்ள முருகன் கோயிலில் அவர் காணிக்கை செய்து வழிபாட்டார். .

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தில் கழுத்தளவு நீரில் இறங்கி அதிமுகவினர் நுதன முறையில் வேண்டுதல் நடத்தினர். குளத்தில் வேண்டுதல் நிறைவேற்றிய பிறகு அவர்கள், சுசீந்திரம் தாணுமலயான் கோயிலில் சிறப்பு பூஜைகளையும் யாகங்களையும் நடத்தினர்.