தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்துவரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார்.
சென்னை அருகே புதிதாக அமைய உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வரே இருப்பார் என்று சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது.
ஆளுநர் - முதல்வர் மோதல்
நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது திமுக தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வந்தது. அது தமிழ்ப் புத்தாண்டு என்று அப்பட்டமாக வெளியே தெரிந்தது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த விருந்தை ஆளுங்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. இதனையடுத்து மயிலாடுதுறையில் ஆளுநர் வாகன அணிவகுப்பில் கறுப்புக் கொடி கம்புகள் வீசப்பட்டது சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்தினார். இணைவேந்தரான அமைச்சர் பொன்முடி அழைக்கப்படாத நிலையில் இந்த மாநாடு நடைபெற்றது.

சித்த மருத்துவ பல்கலைக்கழகம்
மாநாடு தொடங்கிய அன்றைய தினமே தமிழக சட்டப்பேரவையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் இனி வேந்தராக தமிழக முதல்வரே இருப்பார். இந்நிலையில் சென்னை அருகே அமைய உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக முதல்வரே இருப்பார் என்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவம், ஆயுர்வேதா,யுனானி யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பான சட்ட முன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார்.

வேந்தர் முதல்வர்
இந்த மசோதாவில், தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்துவரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் எனவும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்துக்கும் முதல்வரே தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் எனவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
