கடைகள் 3 மணிவரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும்.. மு.க ஸ்டாலினுக்கு விக்கிரமராஜா கோரிக்கை.
குறுகிய நேரம் இருந்தால் கூட்டம் அதிகரிக்கும் எனவும், மக்களுக்கு தேவையான உணவுப்பொருள் வழங்குவது தொடர்பாக வணிகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடைகள் செயல்பட பிற்பகல் 3 மணி வரை அனுமதி வழங்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்புத்தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை வைத்தார். வணிகர் சங்கத்தின் 38வது மாநில மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில், சென்னை கே.கே.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக, சவரத்தொழிலாளர்கள், பூ வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு 25 கிலோ அரிசி வழங்கியதாக கூறினார்.
மேலும், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வதாக கூறிய அவர், ஊரடங்கு, கடைகள் அடைப்பு ஆகியவற்றை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாகவும், முதல்வராக பதவியேற்ற உடன் வணிகர்களை அழைத்து பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், 3மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
குறுகிய நேரம் இருந்தால் கூட்டம் அதிகரிக்கும் எனவும், மக்களுக்கு தேவையான உணவுப்பொருள் வழங்குவது தொடர்பாக வணிகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வணிகர் சங்கம் அரசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என கூறிய அவர், நாளை ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்க உள்ளதாகவும், அதுமட்டுமின்றி வியாபாரிகளையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்துவதை விரிவுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைத்தார்.