ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து மதுரை அருகே அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பட்டாசுகள் கடைகள் மீது பாய்ந்ததால் அந்த பகுதிகள் முழுவதும் தீக்காடாய் மாறின.
ஆளுநர் விதயாசாகர் ராவ் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியை ஏற்க அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இந்த செய்தி கேட்டு சசிகலா தரப்பு அதரவு அதிமுக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து உற்சாகத்தில் ஆடிகொண்டிருந்தனர். இந்நிலையில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த நூர்முகமது என்பவரின் டீக்கடையில் விழுந்ததால் தீவிபத்து ஏற்பட்டது.
மேலும் அருகில் இருந்த இரும்பு கடையிலும் தீவிபத்து ஏற்பட்டதால் இரண்டு கடைகளும் முழுவதும் தீயில் எரிந்து நாசமாயின. அருகில் இருந்த 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாயின.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
