It did not seem like that convicted Shashikala

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தினமும் காலையில் தியானம் செய்வது, துளசி மாடத்தை வழிபடுவது, அவ்வப்போது குட்டித் தூக்கம், டிவி பார்த்து பொழுதை கழித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 16 ஆம் தேதி அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாளில் சலுகைகளை வழங்க மறுத்தது. ஆனால் தற்போது சசிகலாவுக்கு சிறிது சிறிதாக ஒவ்வொரு சலுகையாக சிறை நிர்வாகம் அளித்து வருகிறது.

இதனிடையே சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஒவ்வொரு நாளையும் எப்படி கழிக்கிறார் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாள்தோறும் காலை 5 மணிக்கு சிறையில் எழுந்துகொள்ளும் சசிகலா, காலை கடன்களை முடித்து விட்டு ஒரு மணிநேரம் அறையிலேயே அமர்ந்து தியானம் செய்கிறார்.

பின்னர் 6.30 மணிக்கு வெந்நீரில் சசிகலா குளிப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிறைக்குள் இருக்கும் அம்மன் கோயிலுக்கு இளவரசியோடு சென்று சாமி தரிசனம் பெறுகிறார். அங்கு ஏற்கனவே ஜெயலலிதா வைத்த துளசி மாடத்தையும் சசிகலா சுற்றி வருகிறாராம்.

பின்னர் செய்தித்தாள்களை படிக்கும் சசிகலா காலை 8.30 மணிக்கு டிபன் சாப்பிடுகிறார். இதைத்தொடர்ந்து இளவரசியும் சசிகலாவும் டிவி பார்க்கின்றனர்.

மதியம் 2 மணிக்கு மதிய சாப்பாட்டை சாப்பிடும் சசிகலாவும் இளவரசியும் பின்னர் ஒரு குட்டித் தூக்கம் போடுகின்றனராம். இதைத்தொடர்ந்து மீண்டும் டிவி பார்க்கும் இருவரும் 5 முதல் 6 மணி வரை தங்களின் உறவினர்களோடு பேசுகின்றனராம்.

இரவு 7.30 மணிக்கு இரவு சாப்பாட்டை முடித்து விடும் அவர்கள் 11 மணி வரை பேசிக்கொண்டு இருக்கின்றனராம். 11 மணிக்கு மேல் தான் இருவரும் தூங்கச் செல்கின்றனராம்.

இது சசிகலாவுக்கு தண்டனை கொடுத்த மாதிரி தெரியவில்லை. கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் சொகுசாக தங்கி இருந்தது போல், சசிகலா பெங்களூர் சிறையில் சொகுசாக இருக்கிறார் போலும்.