உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்... பிரதமர் மோடி கடுமையாக தாக்கிய சரத் பவார் கடும் தாக்கு!
தேர்தல் ஆதாயத்துக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மீது தரம் தாழ்ந்த குற்றச்சாட்டுக்களை பிரதமர் மோடி முன்வைத்தது வெட்கப்பட வேண்டிய செயல் என்றும் அதை ஏற்க முடியாது என்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் நேற்று முன் தினம் ‘ஜன ஆக்ரோஷ்-ஹலா போல்’ என்ற மிகப்பெரிய பேரணியை காங்கிரஸ் கட்சியும், தேசியவாதகாங்கிரஸ் கட்சியும் இணைந்து நடத்தின. இந்த பேரணியில் தேசியவாதகாங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதாவது-
குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் குஜராத் தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர், இந்திய ராணுவ முன்னாள் தளபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.
வெட்கமாக இருக்கு
இது போன்ற குற்றச்சாட்டை கூறும் பிரதமர் மோடியை நினைத்தால், வெட்கமாக இருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் மீதும், ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள் மீதும் நீங்கள் குற்றம்சாட்டி இருக்கிறீர்கள் மோடி.
தன்னுடைய அரசின் தோல்விகளை மறைக்கும் நோக்கில், பாகிஸ்தானை குறித்தும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறியும் மக்களின் கவனத்தை திசைதிருப்ப மோடி பேசுகிறார்.
திசைதிருப்பும் முயற்சி
நாட்டின் பிரதமர் மனதில் வித்தியாசமான தோற்றம் உருவாகி இருப்பதை நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். முக்கியப்பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
மோடி அரசு விவசாயிகளின் பிரச்சினைகளை இன்னும் தீர்க்கவில்லை, நாடும் பல்வேறு சிக்கல்களையும் சந்தித்து வருகிறது. ஆனால், பிரதமர் மோடியோ குஜராத் தேர்தலில், பாகிஸ்தான் தொடர்பு இருக்கிறது என்று கூறுகிறார். பிரதமர் மோடி நாட்டை அழித்துவிட்டார், பிரதமர் பதவியின் தரத்தை குறைத்துவிட்டார்.
மிரட்டல் பேச்சு
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், எதிர்க்கட்சியினருக்கு எதிரான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றை உரிய நேரத்தில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய மிரட்டல் பேச்சுகள் ஏற்புடையவை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகளை இவ்வாறு அச்சுறுத்துமானால், அதே மக்கள் அவர்களது அதிகாரத்தைப் பறிப்பார்கள்.
மின்கட்டணம் செலுத்தாதீர்கள்
விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதாகவும், நிலுவைத் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதாகவும் மாநில அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எந்தத் தொகையும் வங்கிக் கணக்குக்கு வரவில்லை.
பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் வரை மின்கட்டணம் உள்பட எந்த விதமான வரியையும் விவசாயிகள் செலுத்தக் கூடாது. மொத்தத்தில் விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் மத்திய, மாநில பாஜக அரசுகள் தோல்வியடைந்துவிட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.